
ஆகஸ்ட் 31, 2024 அன்று ஜெத்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் (IISJ) நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில், புதிய இந்தியத் துணைத் தூதர் திரு. ஃபஹத் அகமது கான் சூரிக்கு ஜெத்தாவில் இந்திய சமூகம் (ICJ) சார்பில் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய திரு. ஃபஹத் அகமது கான் சூரி அவர்கள் தமது சிறப்புரையில், இந்திய சமூகத்தின் நிலையான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, சவுதி அரேபியாவிற்கும் (KSA) இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தின் பங்கை வெகுவாக பாராட்டினார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், முதலீடு மற்றும் புதுமைக்கான புதிய வழிகளை திறக்கவும், வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இங்குள்ள இந்திய வல்லுநர்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்திய வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பதிவு செய்ய தரவுத்தளத்தை இந்தியத் துணைத் தூதரகம் உருவாக்க தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய சமூகத்துடனான தூதரக உறவை மேம்படுத்த கவனம் செலுத்தும் அணுகுமுறையுடன் ஓபன் ஹவுஸ் முறை தொடரும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற குட் ஹோப் அகாடமி மற்றும் ஃபெனோம் அகாடமி குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கவர் நடனங்கள், கோழிக்கோடு இசைக் குழுமத்தின் மெல்லிசைப் பாடல்கள் ஆகியவை இந்தியாவின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவின் ஒற்றுமை பறைசாற்றும் வகையிலும் இருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்வு, ஒரு வழக்கமான நிகழ்ச்சி என்பதை விடவும் இந்திய-சவுதி அரேபிய கலாச்சார பாரம்பரிய தொடர்புகள் வலுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக இருந்தது.

கான்சுல் ஜெனரல் திரு. ஃபஹத் அகமது கான் சூரியின் பதவிக்காலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான அம்சமாக அமையும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு மிக நேர்த்தியாக ICJ நிர்வாகக் குழுவினர் வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
அன்புடன் M.Siraj
Comments