
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மேலும் ஒரு மைல்கல்லாக மாணவர்களுக்கான தமிழ்ப் பயிற்சி மையத்தின் பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (14-2-25) அன்று நடைபெற்றது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஜெத்தா நோவல் பள்ளியின் முதல்வர் திரு முகம்மது ஷபீக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில், பதிவு செய்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திரு ஃபயாஸ் அஹமத் அவர்கள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நோவல் பள்ளியின் முதல்வர் அவர்களுக்கு திரு காஜா மைதீன் அவர்களும் , திரு ஜெய்சங்கர் அவர்களும் பூங்கொத்து வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பயிற்சி மையத்தின், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குமான நெறிமுறைகளை திரு பார்த்திபன் அவர்கள் விளக்கி கூறினார். அதனைத் தொடர்ந்து, ஜெத்தா நோவல் பள்ளியின் முதல்வர் திரு முகம்மது ஷபீக் அவர்கள் வண்ண நாடா வெட்டி பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி வகுப்புகளை பேராசிரியர் ஹேமா ராஜா, மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி, பேராசிரியர் தங்கம் மகேந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் திருமதி சத்யா தங்கம் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். ஜெத்தா தமிழ்ச்சங்கம் எடுத்துக்கொண்ட இந்த முயற்சிக்கு மருத்துவர் கவிதா அவர்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக திரு. மூர்த்தி அவர்கள் நன்றி கூற, நிகழ்ச்சியை திரு அம்மான் அவர்கள் இனிதே தொகுத்து வழங்கி இருந்தார், திரு. சிராஜ், திரு. சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைக்க, மேலும் ஜித்தா தமிழ்ச்சங்க மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் திரு. பிரேம், திரு . செந்தில் ராஜா , திரு. ராமானுஜம் மற்றும் அனைவரது ஒத்துழைப்புடனும் விழா இனிதே நடைபெற்றது.
அன்புடன் M.Siraj
Comments