
சவூதி அரேபியா அல்-அசாவில் ரமலான் பண்டிகை மற்றும் தமிழ் வருடப் பிறப்பு விழா அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பில் 12-04-2024 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் அல்-அசா தமிழ்ச் சங்கம் செயற்குழு உறுப்பினர் திருமதி. ஷர்மிளா பரமசிவன் அவர்கள் வரவேற்று பேசினார். பிறகு சிறப்பு விருந்தினர் மௌலவி.திரு. அல்தாஃப் பாரூக் (இஸ்லாமிய மையம், அல்-அசா) அவர்கள் ரமலான் பண்டிகையின் மாண்பினையும் மத நல்லிணக்கத்தின் சிறப்பினையும் விளக்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து திருமதி. மான்விழி சுரேஷ் மற்றும் திருமதி. ஸ்ரீஜா தினேஷ் ஆகியோர் தமிழ் வருடப்பிறப்பு பற்றி சிறப்புரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, மற்றும் பெரியவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள் திரு. சுரேஷ் மற்றும் முனைவர். அருணா நாகராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் விழா குழு சார்பாக நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. தமிழர்கள் பலர் குடும்பங்களுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை, அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர். பரமசிவன், முனைவர். நாகராஜன் கணேசன், பொறியாளர். சுபஹான், திரு. ரவூப் மற்றும் திருமதி. ஷாலிஹா ரவூப் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இறுதியில், முனைவர். நாகராஜன் கணேசன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.
அன்புடன் சிராஜ்
Comments